கோவில்பட்டி அருகே படர்ந்தபுளி கிராமத்தை சேர்ந்த மக்கள் மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் தலைமையில் வந்து ஊராட்சி ஒன்றியத்தை முற்றுகையிட்டனர். இதில், ஒன்றிய குழு உறுப்பினர் ம.மணிகண்டன், கட்டுமான சங்க நகரக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் கே.முத்துமாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, 100 நாள் வேலை முழுமையாக வழங்க வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) சீனிவாசனிடம் வழங்கிய மனு விபரம்: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோணுகால் ஊருட்சி படர்ந்தபுளி பகுதியில் அருந்ததியர், பறையர் சமுதாய மக்களுக்கான மயானத்தில் கொட்டகை, சாலை வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். படர்ந்தபுளி, கங்கன்குளம் பகுதியில் 100 வேலை திட்டத்தில் கடந்த 2 மாதங்களாக தொழிலாளர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. இந்தாண்டு நிறைவடைய 2 மாதங்களே உள்ள நிலையில், தொழிலாளர்களுக்கான 100 நாள் வேலையை உறுதி செய்ய வேண்டும், என தெரிவித்திருந்தனர்.









