சேலத்தைச் சேர்ந்த சாமுவேல் ஸ்டீபன் என்ற டாக்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இருந்து ஏர் பிஸ்டல் துப்பாக்கியை ஆன்லைன் மூலம் வாங்கியிருந்தார். வாங்கிய ஏர் பிஸ்டல் துப்பாக்கியில் பழுது இருந்ததால் அதனை மீண்டும் கொரியர் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் திருப்பி அனுப்பி வைத்தார் .அந்த கொரியர் நிறுவனம் துப்பாக்கி பார்சல் குறித்த எந்த விவரங்களையும் விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் விமானம் மூலம் அனுப்புவதற்காக விமான நிலையம் கொண்டு சென்றனர்.
பார்சல்களை சோதித்த விமான நிலைய அதிகாரிகள் துப்பாக்கி ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து சம்பந்தப்பட்ட கொரியர் நிறுவனத்தை அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் ஐயும் நேரில் அழைத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து முறையான தகவல் தெரிவிக்காமல் துப்பாக்கியை கொரியர் மூலம் விமானத்தில் அனுப்பி வைக்க முயன்றதாக டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் மீது விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி முருகன் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் டாக்டர் சாமுவேல் ஸ்டீபன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.