கொரோனா நிவாரணம் வழங்கி வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்து பலவகைகளில் விஜய் பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடினர்.
நடிகர் விஜயின் 47 வது பிறந்தநாளை இன்று விஜய் ரசிகர்கள் சார்பாக கொரோனாவை மறந்து கோலாகலமாக தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு கொண்டாடி வருகின்றனர்.

மதுரை விஜய் ரசிகர்கள் கடந்த இரண்டு நாட்களாகவே போஸ்டர் மூலமாக தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்திவந்த நிலையில் இன்று ஏழைகளுக்கு உணவளிப்பது, மளிகை பொருட்கள் வழங்குவது ஒரு படி மேலே சென்று வாகனங்களுக்கு இலவசமாக பெட்ரோல் கொடுத்தது என கொண்டாடி வந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் நல பிரிவில் இன்று நள்ளிரவு 12 மணி பிறகு பிறந்த முதல் 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை விஜய் ரசிகர் மன்றம் சார்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது அதன் படி மருத்துவமனை நிர்வாகத்தின் அனுமதியுடன் குழந்தைகளுக்கு நேரில் சென்று விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வழங்கினார்கள்.

கொரோனா காரணமாக விஜயின் படத்தினை திரையரங்குகளில் காண முடியவில்லை என ரசிகர்கள் மத்தியில் சோகம் இருந்தாலும் இப்படி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்வது எங்களுக்கு அந்த சோகத்தை மறக்கடிக்க செய்வதாக கூறினர்.
விஜயின் பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கியது மதுரை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.










