திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அம்மாபாளையம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மைசூர் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு வெல்லம் ஏற்றி வந்த மினி வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென டயர் வெடித்து கவிழ்ந்தது. இதனால் வண்டியில் இருந்த வெல்லம் தரையில் கொட்டி சாலை முழுதும் உருண்டோடியது.

சாலையே வெல்லக்காடானதை கண்ட மக்கள் , வெல்லத்தை முண்டியடித்து அள்ளிச் சென்றனர். ஏறத்தாழ வெல்லம் காலியான நிலையில், பாச்சல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு பாய்ச்சலாக விரைந்து வந்து, மிச்சமிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்தி வெல்லத்தை மீட்டுச்சென்றனர். அதுவரை வெல்லம் அள்ளும் அவசரத்தில் மக்களால் கவனிக்கப்படாமல் நிராதரவாக நின்ற காயமடைந்த மினி வேன் ஓட்டுநரை செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.















