மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது வரை 88 ஆண்கள், 51 பெண்கள் உட்பட 139 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரு நாள் மட்டும் கொரோனா பெருந்தொற்றல் 10 ஆண்கள், 7 பெண்கள் உட்பட 17 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர்களில் 10 ஆண்கள், 6 பெண்கள் உட்பட 16 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தற்போது 139 பேர் சிகிச்சை பெற்று வரக்கூடிய மருத்துவமனை வளாகத்தில் ஒரு ஆண், ஒரு பெண் உட்பட இருவர் தப்பி ஓடியுள்ளனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தோப்பூர் அரசு நுரையீரல் மருத்துவமனை நிர்வாகம் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இங்கு இது போன்ற சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகிறது, திறந்த வெளி பகுதி என்பதால் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றி இது போன்ற சம்பவம் நடைபெற்ற வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை, கடந்த ஒரு மாதத்தில் 15 நபர்கள் வரை தப்பி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது












