தமிழ்நாடு முழுவதும் ‘மக்களுடன் முதல்வர் ‘என்ற சிறப்பு முகாம் நடைபெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளும் வருவாய் நிர்வாகமும் சேர்ந்து, அனைத்து அரசு துறைகளையும் இணைத்து ஆங்காங்கே முகாம்கள் நடத்துகின்றன.
இதில் அனைத்து அரசுத் துறைகளும் ‘ஸ்டால்’கள் போட்டு, பொருட்காட்சி நிகழ்ச்சி போல் பிரம்மாண்டமாக நடத்தப்படுகிறது. நெல்லை மாநகராட்சியில் ஒவ்வொரு வார்டிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்கள் குவிந்தன.

இன்று பெருமாள்புரத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நடந்தது. பெருவாரியாக, மகளிர் உரிமைத் தொகை மற்றும் இலவச வீட்டு மனை பட்டாக்களுக்கு அதிக மனுக்கள் வந்தன.
முகாமில், தொடக்கத்தில் அனைத்து மனுக்களையும் கணினியில் பதிவு செய்தனர். பின்னர் அந்தந்த துறைக்கு அனுப்பப்பட்டு, ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டது ஆனால், நேரம் செல்லச் செல்ல மனுக்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படவில்லை. மக்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகைச் சீட்டிலும் எண்கள் குறிப்பிடப்படவில்லை.
இதனால் பொதுமக்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.’ எங்கள் மனுக்கள் பரிசளிக்கப்படுமா, அல்லது ஒப்புக்கு வாங்கப்பட்டனவா? ‘ என்று குழப்பம் அடைந்தனர்.
அனைத்து மனுக்களும் கணினியில் பதியப்படுவதும், விரைவில் பரிசீலிக்கப்படுவதும் மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம் பத்தோடு பதினொன்றாகவே ஆகிவிடும்.









