தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தில் (சிஎஸ்ஐ) தேர்தல் வாக்குரிமை கட்டணமாக கடந்தகாலங்களில் 100 ரூபாய் இருந்தது. தற்போது அதை 600 ரூபாயாக உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை திரு மண்டலத்திற்கு உட்பட்ட சேகர சபை மக்கள் பெரும்பாலானோர் எதிர்த்து வருகின்றனர்.
ஆசீர்வாதபுரம் சேகரத்தில் இந்த கட்டண உயர்வை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோடு, சபை மக்கள் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். இது குறித்து போராட்டத்துக்கு தலைமை வகித்த சேகர செயலாளர் ஸ்டாலின் கூறுகையில், ‘ கடந்த காலங்களில் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் இக்கட்டான சூழலில்
வாக்குரிமை கட்டணத்தை ஆறு மடங்காக அதிகரித்திருப்பது சபை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கீழ் கமிட்டியின் பரிந்துரைகளுக்கு செவி சாய்க்காமல் திருமண்டல நிர்வாகம் எதேச்சையாக செயல்படுகிறது” என்றார்.
ஆசிர்வாதபுரம் உறுப்பினர் யோசுவா ஆசீர்வாதம், போலையர்புரம் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் டேவிட், ஆசிர்வாதபுரம் சேகர பொருளாளர் சேகர், உறுப்பினர்கள் ஜான்சன், பழனியப்பபுரம் மன்ற உறுப்பினர் ஜெயசிங் உட்பட சுமார் 30 பேர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் வாராவாரம் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என்றும் தெரிவித்தனர்.









