தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் ராஜீவ்நகர் இ.பி. காலணி பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ் (49). தொடக்கப்பள்ளி ஆசிரியர்.
இவர் தனக்கு சொந்தமான காரில் மருத்துவ காரணங்களுக்காக சென்னை செல்ல அருள் வசந்தி பெயரில் இபாஸ் பெற்று எட்டயபுரம் மஞ்சநாயக்கன்பட்டியிலிருந்து மூவரை கடந்த 5ஆம்தேதி ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் அமுதாசெல்வி என்பவரின் பெயரில் சென்னை அசோக்நகர் ஆவடி முகவரியிட்டு, மருத்துவ காரணங்களுக்காக இபாஸ் பெற்று இருவரை கயத்தாறு தெற்கு மயிலோடைக்கு அழைத்து வந்துள்ளார்.
தவறான ஆவணங்களை பயன்படுத்தி இபாஸ் பெற்றதாலும், ஊரடங்கு காலத்தில் நோய் தொற்றினை பரப்பும் விதமாக நடந்துகொண்டதோடு, தன்னை தனிமைப்படுத்தவும் செய்யாததால் பாண்டவர்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் புகார் அடிப்படையில் கோவில்பட்டி மேற்கு காவல் அதிகாரி வழக்கு பதிவு செய்தார்.
அமல்ராஜ் பயன்படுத்திய வாகனம் கைப்பற்றப்பட்டதோடு, அவர் கோவில்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தப்படும் மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.