எத்தனால் கொள்முதல் விலை உயர்வு

0
510

எரிபொருளில் கலக்கும் எத்தனாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.1.84 வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இதற்கான முடிவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
மத்திய அரசின் இந்த முடிவின்படி, வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்கி ஓராண்டுக்கு எண்ணெய் சந்தைப்படுத்தும் பொதுத் துறை நிறுவனங்கள் எரிபொருளில் கலப்பதற்காக கொள்முதல் செய்யும் சி ஹெவி மொலாசஸிலிருந்து தருவிக்கப்படும் எத்தனாலுக்கான விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.43.46-லிருந்து ரூ.43.75-ஆகவும், பி ஹெவி மொலாசஸிலிருந்து தருவிக்கப்படும் எத்தனாலுக்கான விலை ரூ.52.43 லிருந்து ரூ.54.27-ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், கரும்பு சாறு, சர்க்கரை, சர்க்கரை பாகு ஆகியவற்றிலிருந்து தருவிக்கப்படும் எத்தனாலுக்கான விலை ரூ.59.48-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வரும் 2019-2020 சர்க்கரை பருவத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள இந்த விலை உயர்வு வரும் டிசம்பர் 1-ஆம் தேதியிலிருந்து அடுத்தாண்டு நவம்பர் 30-ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலில் எத்தனாலை கலப்பது அதிகரிக்கும்பட்சத்தில் ஆண்டுக்கு 20 லட்சம் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இறக்குமதி செலவினத்தில் 100 கோடி டாலர் வரை மிச்சமாகும் என பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here