மத்திய பிரதேச மாநிலத்தில் பாலியல் ரீதியில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக மாநகராட்சி ஊழியர் ஒருவர், பெண்ணொருவர் மீது புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பான விசாரணையின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மத்திய பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள், அதிகாரவர்கத்தினர், வர்த்தகர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என செல்வாக்கு மிக்கவர்கள் பணம் உள்ளவர்களின் உல்லாச தேவைகளுக்கு பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை அனுப்பி வைத்த கும்பல் ஒன்று, அவர்களின் பாலியல் வீடியோக்களை அவர்களுக்கே தெரியாமல் படம் பிடித்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டியது. இது 5 பெண்கள் கொண்ட கும்பல் என்று தெரியவந்து உள்ளது. இவ்வாறு மிரட்டி கோடிக்கணக்கான பணமும் பெற்றுள்ளது.
இந்த விவிஐபிகள் பட்டியலில் முன்னாள் ஆளுநர், பாஜக மாநில பிரிவின் முன்னாள் நிறுவன செயலாளர், முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள், முதலமைச்சரின் செயலகத்தில் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி உட்பட பல வி.வி.ஐ.பி.க்கள், சிவராஜ் சிங் சவுகானின் காலத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பொறியாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் அதிகாரவர்கத்தினர் அடங்குவர். 13 ஐஏஎஸ் அதிகாரிகள் மிரட்டப்பட்டு உள்ளனர்.
இந்தக் கும்பலைச் சேர்ந்த 5 பெண்கள் மற்றும் அவர்களுக்கு உதவிய ஓட்டுநர் ஒருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து கம்ப்யூட்டர்கள், லேப்டாப்புகள் மற்றும் செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவற்றை ஆராய்ந்ததில் முன்னாள் அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் மற்றும் அவர்கள் பேசும் ஆடியோக்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வீடியோக்களை வைத்தே இந்த கும்பல் மிரட்டிப் பணம் பறித்தது தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் சிலருடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும், ஒவ்வொருவரும் தனித்தனி மோசடி கும்பலை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மூத்த அதிகாரிகள் 10 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக, வழக்கை விசாரிக்கும் தனிப்படை காவல் அதிகாரி சஞ்சீவ் ஷமி தெரிவித்துள்ளார்.













