CBE.19.06.21.N11.FP
கோவையில் சட்ட விரோதமாக தங்கிய வங்கதேச பெண் கைது
கோவை
கோவை சரவணம்பட்டி பகுதியில் மசாஜ் சென்டரில் சட்டவிரோதமாக தங்கி விபச்சாரத்தில் ஈடுபட்ட வங்கதேச பெண் கைது செய்யப்பட்டார்.
கோவை சரவணம்பட்டி அடுத்த மகா நகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சரவணம்பட்டி போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய விபச்சார புரோக்கர்கள் கேரளாவைச் சேர்ந்த அஜித் மோன் (29) மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மகந்த்ஷா ( 26 )ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அங்கிருந்த ரபிக், ஆஷிக் இருவரும் தப்பி ஓடினர். அங்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக இருந்த இரண்டு பெண்களை மீட்டு கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். அந்தப் பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் வங்கதேசத்தைச் சேர்ந்த அஜிதா (21) என்ற பெண் இருந்தது தெரியவந்தது. மேலும் அந்தப் பெண்ணிடம் நடத்திய விசாரணையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் மூலமாக கோவைக்கு வந்து தங்கியிருப்பதாகவும் மசாஜ் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. மேலும் அவரிடம் பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட ஆவணங்களை போலீஸார் கேட்டனர். ஆனால் அந்த பெண்ணிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட எந்த விதமான ஆவணங்களும் இல்லை. வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு எப்படி வந்தார்? போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி வந்தாரா ? இவரை அழைத்து வந்த நபர் யார் ? இந்தப் பெண்ணை இந்த மசாஜ் சென்டரில் சேர்த்துவிட்ட புரோக்கர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து பாஸ்போர்ட் இல்லாமல் கோவையில் தங்கியிருந்த அஜிதா மீது வெளிநாட்டினர் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து அஜிதா கோவையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கோவையில் வங்கதேச பெண் சட்டவிரோதமாக தங்கியிருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு கைதாகி இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.