தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுர த்தை சேர்ந்த தங்கத்துரை29) என்பவருக்கு கடந்த 10.2.2019 அன்று வெண்ணிலா (21) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் வெண்ணிலா கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி 2 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவரது வீட்டில் உள்ள கட்டிலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக அன்றைய சாத்தான்குளம் பொறுப்பு டிஎஸ்பி நாகராஜன் சந்தேக மரணத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்து, அவரது கணவர் தங்கதுரை, மாமனார் முருகன், மாமியார் சமுத்திரம் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகளில் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் இதுகுறித்து திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா விசாரணை நடத்தி வந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக உடற்கூறு ஆய்வு அறிக்கை கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி வந்த நிலையில் அதில் உயிரிழந்த வெண்ணிலாவின் தலைப்பகுதியில் காயம் இருந்ததால் தான் அவர் உயிரிழந்துள்ளார் என உடற்கூறு ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனால் இந்த சந்தேக வழக்கை (174) சாத்தான்குளம் போலீசார் உடற்கூறு ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் கொலை வழக்காக (302) மாற்றம் செய்து வழக்குப்பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் வெண்ணிலாவின் கணவர் தங்கதுரையை போலீசார் கைது செய்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.