கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த இரு வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலாகியுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் மதுபானம் கடத்தி வருபவர்களை காவல்துறையினர் கண்காணித்து கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக மாநிலம் விட்டு மாநிலம் ரயில் மூலம் மதுபானங்கள் கடத்தப்படுவதாக ரயில்வே பாதுகாப்பு படைக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து தென்னக ரயில்வே பாதுகாப்பு படை தலைவர் பிரேந்திர குமார் உத்தரவின் படி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வரும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தென் மாவட்டங்களில் மிக முக்கியமான ரயில் நிலையமாக விளங்கும் மதுரை ரயில் நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சட்டவிரோதமாக மதுப்பாட்டில்களை கடத்திய சுமார் 15 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 200க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரயில்களில் பயணிகள் போல மது கடத்தலில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.