ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். .அதைத்தொடர்ந்து 120 படுக்கைகள் வசதிகொண்ட கோவிட் கேர் சென்டரை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஸ்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்பிரமணியம், ‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்றைய தினம் 318 நபர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 636நபர்கள் பூரண குணம் பெற்று வெளியே சென்றுள்ளனர். ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ராணிப்பேட்டையில் தொற்று ஏற்பட்டவர்கள் காட்டிலும் இருமடங்கு குணம் பெற்று இல்லம் திரும்பி உள்ளனர் .
தமிழக முதல்வரின் புயல்வேக நடவடிக்கை காரணமாக ஆக்சிசன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள், அதிதீவிர சிகிச்சை படுக்கைகள் என நேற்று இரவு வரை 30002 படுக்கைகள் காலியாக உள்ளன. படுக்கை தட்டுப்பாடு குறைந்துள்ளது.
வருகிற நிதிநிலை அறிக்கையில் ராணிப்பேட்டை மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தி மேம்படுத்தப்படும். வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனை பொருத்தவரை 350 படுக்கை வசதிகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. இந்த மாவட்ட மருத்துவமனைக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் தரம் உயர்த்தி மேம்படுத்தி தரப்படும். என தெரிவித்தார். மாவட்டத்தில் 30 மருத்துவர்கள் 68 செவிலியர்களும் படிப்படியாக பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

பொதுமக்களைப் பொறுத்தவரை பெரிய அளவிலான அறிகுறி இருந்தாலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலையை மறந்து மூச்சுத்திணறல் ஏற்படும் வரை வீட்டில் இருந்து பிறகு மருத்துவமனைக்கு வருவதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்கிறது.
தமிழ்நாட்டின் அனைத்து மருத்துவமனைகளின் கட்டமைப்பை மேம்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரொனா மூன்றாம் கட்ட அலை வந்தாலும் கூட அதை எதிர்கொள்ள தயார் நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது’ என்றார்