புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகச்சிறப்பான நாளாகும்.
அதுவும் இந்தமுறை சனிக்கிழமையில் வந்ததால் மிகவும் விஷேசமாக கருதப்படுகிறது.
இந்நாளில், புனித தலங்களில் உள்ள நீர் நிலைகளிலும், புனித நதிகளிலும் நீராடி மறைந்த முன்னோர்களுக்கு படையலிட்டும், தர்ப்பணம் கொடுத்தும் வழிபட்டால் கர்மா நீங்கி அவர்களது பரிபூரண ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம்.
மேலும் கருப்பு உளுந்து, கறுப்பு எள், வெல்லம், உப்பு, புத்தாடை போன்றவற்றை தானம் அளித்து வழிபடுவதும் மிகவும் சிறப்பு என கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
காசிக்கு நிகராக கருதப்படும் திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் மேற்குபுறம் அமைந்திருக்கும் கமலாலய தீர்த்த குளத்தில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி மறைந்த தங்களுடைய முன்னோர்களுக்கு அரிசி, வாழைக்காய், தேங்காய், காய்கறிகள், பழங்கள் வைத்து தர்பணம் செய்து வழிபட்டனர்.
மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் திரண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், கடற்கரையில் திதி கொடுத்தனர். இதையடுத்து, 22 தீர்த்தங்களில் புனித நீராட சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்கள் நலன் கருதியும், கூட்டத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்கவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.