ஈரோடு மாவட்டத்தின் கடை கோடியில் கடல் மட்டத்தில் இருந்து 1105 மீட்டர் உயரத்தில் உள்ளது தாளவாடி வனப்பகுதி. அதன் சுற்று வட்டார கிராமங்களான கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்ட காஜனூர் பாரதிநகர், கெட்டவாடி, தலமலை அருள்வாடி போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்ன வெங்காயம் , பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம்.
இந்த பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது. இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.3 மற்றும் ரூ.4 விலை கொடுப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- விளைச்சல் அதிகம் எனக் காரணம் கூறி குறைவான விலைக்கு கேட்கின்றனர் வியாபாரிகள். கொள்முதல் செய்வதால் பயிர்களுக்கு செலவு செய்த அசல் தொகை கூடகிடைப்பதில்லை. இதனால் பழுத்த தக்காளியை பறித்து சாலை ஓரத்தில் கொட்டி வருகிறோம். விவசாயத்தை நம்பி இருந்தால் கடன் தான் அதிகமாகி அதனால் அவதிப்பட வேண்டிய நிலை வந்து விடும். எனவே விவசாயத்தை விட்டு நகர் பகுதிக்கு தான் இனி வேலைக்கு செல்ல வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.