மூன்று நாட்களுக்கு முன்பு காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தை சுத்தம் செய்த போது வெடிபொருள் என்று தெரியாமல் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்களான சூர்யா மற்றும் திலீபன் உடைக்க முற்பட்டதில் வெடிபொருள் வெடித்து சிதறி இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
ஆகையால், அந்த பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வெடிக்காத மற்றொரு மர்ம வெடிபொருள் கண்டெடுக்கப்பட்டதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
தற்போது காஞ்சீபுரம் மாவட்டம் அனுமந்தபுரம் ஏரியில் கேட்பாரற்று பத்துக்கும் மேற்பட்ட வெடிபொருட்கள் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. அங்குள்ள மலைப் பகுதிகளில் ஆடு மாடுகளை மேய்க்க சென்றவர்கள் ஆங்காங்கே வெடிபொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வெடிபொருள் பாகங்களை இளைஞர்கள் சிலர் எடுத்துச்சென்று இரும்புக்கடையில் விற்பதாக கூறப்படுகிறது.