ஹாங்காங்கில் நீதிச் சுதந்திரம் கோரியும், ஜனநாயகத்தை நிலை நாட்ட வேண்டும் என்றும் 3 மாதங்களாக போராட்டங்கள் நடப்பதும், அதை போலீசார் தடுத்தால் வன்முறை வெடிப்பதும் அவ்வப்போது நடந்து வருகிறது.
ஹாங்காங் எல்லையில் ஏற்கெனவே சீன ராணுவம் ஒத்திகையில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் படை அணிகள் மாற்றம் என்ற பெயரில் சீன ராணுவ துருப்புகள் ஹாங்காங்கில் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலையில் சுமார் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் துருப்புக்களை பல்வேறு படைத்தலங்களில் நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் தனது ஆளுகைக்கு உட்பட்ட மக்காவிலும் சீன துருப்புகள் களமிறங்கியுள்ளன.
இது ஹாங்காங்கின் நலனுக்காகவும், நிலைத்தன்மைக்காகாவும் சீனா சட்டத்துக்குட்பட்டு எடுத்துள்ள நடவடிக்கை என்றும், ஆண்டுதோறும் படை அணிகள் மாற்றம் வழக்கம்தான் என்றும் அந்த நாட்டின் அரசு ஊடகத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் போன்ற அன்னிய நாட்டு அரசுகள் ஹாங்காங் விவாகரத்தில் தலையிட வேண்டாம் என்றும், அவர்களின் தூண்டலில் போராட்டங்களில் வன்முறை வெடிப்பதாகவும் சீனா குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ள பேரணி ஓரிரு நாளில் நடைபெற உள்ள நிலையில் சீனாவின் பிஎல்ஏ ராணுவம் படைகள் அணி மாற்றம் ஹாங்காங்கில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.