தமிழகத்தில் அதிமுக நிறுவனர் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு “புரட்சி தலைவர்”என்று பட்டம் வழங்கி அவர் மறைந்த பின்னரும் அழைக்கின்றனர்.அதே போல அதிமுகவை எம்.ஜி.ஆர்.மறைவுக்கு பிறகு கைப்பற்றி கட்டிக்காத்து வழிநடத்தி ஆட்சியில் அமர வைத்து சாதனை படைத்த முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவையும் புரட்சி தலைவி என்று கட்சியினர் இன்றும் அழைக்கின்றனர்.
அதே வழியில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை கைப்பற்றி கடும் சட்ட போராட்டத்திற்கு பிறகு கட்சியின் ஒற்றை தலைமையாக,,பொதுச்செயலாளராக பதவியேற்று மதுரையில் அதிமுக பொன்விழா மாநாட்டை நடத்திய எடப்பாடி பழனிச்சாமிக்கு மாநாட்டு மேடையிலேயே “புரட்சி தமிழர்”என்ற பட்டத்தை வழங்கி இனிமேல் கட்சியினர் அனைவரும் அவ்வாறே அவரை அழைக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தனர்.
ஆனால் ஏற்கனவே “புரட்சி தமிழன்”என்ற பட்டத்தை திரையுலகத்தினர் நடிகர் சத்யராஜுக்கு வழங்கியுள்ளனர்.
எனவே, தமிழக அரசியலில் புரட்சி தமிழராக எடப்பாடி பழனிச்சாமியும், தமிழக திரையுலகில் புரட்சி தமிழனாக சத்யராஜும் வலம் வரவுள்ளனர்.
இத்தகைய குழப்பம் இதற்கு முன்பும் எழுந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 40 வருடங்களாக தளபதி என்ற பட்டம் அரசியலில் உள்ளது.இதே போல தமிழ் திரையுலகில் அறிமுகமான காலத்தில் இருந்தே நடிகர் விஜய், இளைய தளபதி என்ற பட்டத்துடன் திரையுலகில் அழைக்கப்பட்டு வந்தார்.தற்போது நடிகர் விஜய்க்கு 45 வயதாகி விட்டதால் தளபதிக்கு முன்னால் உள்ள ‘இளைய’வை எடுத்துவிட்டு தளபதி என்று அழைக்கப்படுகிறார்.
எடப்பாடி பழனிச்சாமி, சத்யராஜ் இருவருமே வயசாளிகள் என்பதால் இவர்களில் ஒருவரை ‘இளைய புரட்சி தமிழர்’ என்று அழைக்க முடியாது. எனவே, ‘இரண்டாம் புரட்சித் தமிழர் ‘ என்று எடப்பாடியை அழைக்கலாமா என்று அவரது சமூக வலைத்தள ஆதரவாளர்கள் கருத்து கேட்டு வருகிறார்கள்.
எப்படியோ, பெயரளவு ‘புரட்சி’, இவர்கள் அனைவரையும் பொறுத்தவரை செயலளவு ஆகாது என்பது மட்டும் உண்மை.