தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவை சேர்ந்த தங்கம் இளையரசனேந்தல் சாலையில் பாத்திரம் மற்றும் இரும்பு கடை நடத்தி வருகிறார்.
இன்று பகலில் அவரது கடைக்கு வந்த 6 பேர், தங்களை கர்நாடக குற்றப்பிரிவு போலீசார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, திருட்டு பொருட்கள் வாங்கியது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று தங்கத்தை ஒரு இனவோ காரில் ஏற்றிச் சென்றுள்ளனர். கரூர் டோல்கேட் அருகே சென்றதும் ரூ. 20 லட்சம் கொடுத்தால் விட்டு விடுவதாகவும் இல்லையேல் வழக்கு பதிய நேரிடும் என்றும் மிரட்டியுள்ளனர். இறுதியாக 5 லட்சம் ரூபாய்க்கு சம்மதித்துள்ளனர்

கடத்தப்பட்ட தங்கத்தின் மகன் பணத்தை கொண்டு போய் கொடுத்த பின்பு விருதுநகர் அருகே தங்கத்தை விடுவித்துள்ளனர். அங்கிருந்து வந்த தங்கம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து போலீசார் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை அடையாளம் கண்டனர். அடுத்துகோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் மேற்பார்வையில் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் துரிதமாக செயல்பட்ட போலீசார், அனைத்து டோல் கேட்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

வெவ்வேறு எண்களை மாற்றிக்கொண்டு டோல்கேட் களை கடந்த அந்த கார், கரூர் அரவக்குறிச்சி டோல்கேட் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த போலீசார் துணையுடன் பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரின் தடுப்பை தகர்த்துவிட்டு கடத்தல் கார் விரைந்துள்ளது. போலீசார் விரட்டி சென்று ஆட்டையாம்பரப்பு அருகில் காரை மடங்கி னர்.
காரில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த பரன்கவுடா, தாஸ், டேனியல், பவுல், பெரோஸ் கான் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர் . தப்பி ஓடிய ஒருவரை தேடி வருகின்றனர்.