தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரத்தில் வாரம் தோறும் சனிக்கிழமை ஆட்டுசந்தை நடைபெறுவது வழக்கம். இது தென்தமிழகத்தில் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை.
இந்த சந்தைக்கு சென்னை, மதுரை, கோவை, விருதுநகர், தேனி, சிவகங்கை,ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க வருவது வழக்கம். தரமான ஆடுகள் குறைவான விலையில் கிடைக்கும் என்பதால் பெருங்கூட்டம் இருக்கும். அதிலும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், பக்ரீத் போன்ற திருவிழா காலங்களையொட்டி நடைபெறும் ஆட்டுச்சந்தை களைகட்டும்.
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக ஆட்டுச்சந்தை செயல்படவில்லை. இதனால் ஆடுகளை வளர்ப்பவர்கள் ஆடுகளை விற்பனை செய்ய முடியமாலும், வியபாரிகள் ஆடுகளை வாங்க முடியமால் தவித்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு தற்பொழுது ஊரடங்கில் தளர்வு கொடுத்து சந்தைகள் செயல்பட அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து 2 மாத கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இன்று எட்டயபுரம் ஆட்டுச்சந்தை சந்தை தொடங்கியது. சந்தை திறப்பது பற்றி எவ்வித முன் அறிவிப்பு இல்லை என்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய வியாபாரிகள் வரத்து குறைவாக இருந்தது. ஆடுகள் வரத்தும் மிக குறைவாக இருந்தது. தூத்துக்குடி மாவட்ட வியாபாரிகள் மட்டுமே வந்திருந்தனர். ஆடுகளின் விலையும் சற்று கூடுதலாக கூறப்பட்டது. ஒவ்வொரு ஆட்டிற்கும் ரூ 3000 முதல் 4000ஆயிரம் வரை விலை உயர்ந்திருந்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக ஆட்டுச்சந்தை செயல்படாத காரணத்தினாலும், ஆடுகள் வரத்தும் குறைவாக இருப்பதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.