கோவை மேட்டுப்பாளையம் சாலை வட கோவையில் கோவை மாவட்ட வன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அலுவலகத்தில் பணியாற்றி வந்த தற்காலிக கணினி இயக்குனர், உதவியாளர், டைப்பிஸ்ட் மற்றும் மாவட்ட வன அலுவலரின் டிரைவர் என 2 ஆண் ஊழியர்கள், 2 பெண் ஊழியர்கள் மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட வன அலுவலகம் நேற்று மூடப்பட்டது. அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தவிர, அலுவலகத்திற்கு கடந்த 2 நாட்களுக்குள் வந்து சென்றவர்கள் மற்றும் அலுவலகப பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்ட வன அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில் வனச்சரக அலுவலகம் வன பாதுகாவலர் அலுவலகம் மியூசியம் மத்திய அரசின் அலுவலகங்கள் வன அலுவலர் குடியிருப்புகள் உள்ளன. இந்த வளாகத்தில் தற்போது 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.













